தலைவா… நீ அரசியலுக்கு வா… உன்னுடைய ரசிகர்களை நம்பி வரவேண்டாம். உன் எதிரிகளை நம்பி வா

567




விபரம் தெரிந்ததில் இருந்து ரஜினி ரசிகனாக இருக்கிறேன். ஆனால் ஒரு முறை கூட அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்றோ, தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்றோ நினைத்ததில்லை. காரணம் நம்மூர் அரசியல்வாதிகளின் அரசியலைப் பார்த்த அனுவத்தில்தான். அரசியல்வாதி என்பவனுக்கு மனசாட்சி என்பதே இருக்கக் கூடாது. சார்ந்திருக்கும் கட்சி என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு மாற்றுக் கருத்து கூறக் கூடாது. எந்தப் பக்கம் புரண்டாவது முட்டுக்கொடுக்க வேண்டும். எதிர்கட்சிகள் என்பவர்கள் தவறு மட்டுமே செய்பவர்கள் என எண்ணவேண்டும். பழகிய நண்பனே எதிர்கட்சியில் இருந்தாலும் தரம் தாழ்த்திப் பேசவேண்டும். இன்னும் பல விஷயங்களை அரசியல்வாதிகளுக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். அதற்கெல்லாம் இவர் சரிப்பட்டு வரமாட்டார் என்ற எண்ணம் எனக்கு எப்பொழுதுமே உண்டு. இப்போதும் கூட.

ஆனால் கடந்த இரண்டு நாட்களாக நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது உண்மையிலேயே இவர் இப்பொழுது அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்றே தோன்றுகிறது. இப்போது கூட அவர் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்ற ஆசையால் அல்ல. கடந்த இரண்டு நாட்களாக நம்மூர் அரசியல்வாதிகளிடமும், அவர்களுக்கு முட்டுக்கொடுக்கும் ‘அல்லு சில்லு’களுக்கும் கிளம்பியிருக்கிறதே ஒரு பயம்… அதை இன்னும் கொஞ்ச நாள் நன்றாகப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. அதற்காகத்தான். ஒருவனுக்கு ஏற்படும் பயத்தை, பய உணர்வாகத்தான் வெளிப்படுத்த வேண்டும் என்றில்லை. சிலர் கோபமாகவும், சிலர் அழுகையாகவும், சிலர் ஏளனமாகவும் வெளிப்படுத்துவர். அப்படி ஒன்றுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. ரஜினியை ஏளனம் செய்வதாக நினைத்து அவர்களின் பயத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றனர். பிடித்தவர்கள் புகழ்ந்தும் பிடிக்காதவர்கள் இகழ்ந்தும் பதிவிடுகிறார்களே தவிர, ரஜினியை யாராலும் புறக்கணிக்க முடிவதில்லை. ‘ரஜினியையெல்லாம் கண்டுகொள்ளக்கூடாது… அப்டியே விட்டுறனும்’ என்று ஒருவர் பதிந்த பதிவில் கூட அவர் ரஜினியைப் பற்றித்தான் பேசியிருக்கிறார் என்பது அவருக்கு தெரியுமோ தெரியாதோ? மற்றவர்கள் பேசுவதைப் போல அவர் அரசியல் பற்றி அடுக்கு மொழிகளில் அரைமணி நேரம் பேசவில்லை. நாற்பது ஐம்பதாண்டு கால அரசியல் வரலாற்றைப் புட்டு புட்டு வைக்கவில்லை. கட்சி பற்றிப் பேசவில்லை. எதிர்காலத் திட்டங்கள் பற்றி பேசவில்லை. அவர் அந்த கூட்டத்தில் அரசியலைப் பற்றிப் பேசியது ஒரே ஒரு நிமிடம். அதுவும் அரசியலில் அவர் நிலை என்ன என்பது பற்றி மட்டும்தான். ஆனால் அன்று லோக்கல் முதல் நேஷனல் சேனல்கள் வரை ப்ரேக்கிங் நியூஸ் அதுதான். மறுநாள் காலை மட்டுமல்ல… இதோ இந்த நிமிடம் வரை அனைத்து செய்தித்தாள்களின் தலைப்புச் செய்தியும் அதுதான். இதுவே ரஜினி என்பவருக்கு மக்கள் கொடுக்கும் முக்கியத்துவம். தலைவா..

நீ ஒரு நிமிடம் பேசிவிட்டு, பலரின் தூக்கத்தைக் கலைத்துவிட்டு உன் பாட்டுக்கு வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டாய். பார்… பல நாட்கள் எங்கிருந்தார் என்று தெரியாதவரெல்லாம் நீ ஒருநிமிடம் பேசிய அரசியலுக்கு அரைமணி நேர அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். தலைவா.. நீ அரசியலுக்கு வா… ஜெயித்துக்காட்டு அல்லது தோற்றுப் போ… தவறே இல்லை.. இங்கு தோற்காத ஆளுமில்லை. உனக்கு இந்த ‘கழிசடை அரசியல்’ தெரியாமல் தோற்றுப் போகலாம்.. சூது வாது தெரியாமல் தோற்கலாம். இங்கு 50 ஆண்டு காலம் அரசியல் அனுபவம் உள்ளவர்களையே பல தேர்தல்களில் ஓடச் செய்தவர்கள் நம் மக்கள்.. காமராஜரை தோற்கடித்ததற்கு இந்த கணம் வரை பிராயச்சித்தம் தேடாத கூட்டமாயிற்றே இது. பல ஆண்டுகளாக அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட பலரை சட்டமன்றம் எப்படி இருக்கும் என்றே பார்க்க விடாதவர்கள் இந்த மக்கள். ‘ஒரே ஒரு முறை எங்களிடம் கொடுங்கள் அப்புறம் பாருங்கள்’ என்று காலில் விழுந்தவர்களை எட்டி உதைத்தவர்கள் நம் மக்கள். அவர்களுக்கு முன்னால் நீ தோற்பது பெரிய விஷயமே அல்ல. உன் துறையில் நீ தோற்றால்தான் நீ வெட்கப்படவோ வேதனைப் படவோ வேண்டும். உன் துறையில் என்றுமே நீதான் ராஜா.. உன் துறையில் நீ சாதிக்காதது இன்னும் என்ன இருக்கிறது? ‘தமிழ்’ என்ற ஒன்றை வைத்துக்கொண்டு, ஊரை ஏமாற்றி குண்டுச் சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில், வெளிநாடுகளில் தமிழனுக்கு அடையாளமாய் இருப்பவன் நீ. ஜப்பான் மக்களைக் கூட தமிழ் கற்கச் செய்தவன் நீ. மலேசிய அதிபரை வீடு தேடி வரவைத்தவன் நீ. உன் துறையில் நீ சாதித்ததைப் போல், அரசியலில் இங்கு எவரும் சாதிக்கவில்லை. உன்னை பயந்தாங்கொள்ளி என்கிறார்கள்.. அவர்களின் தைரியத்தைப் பற்றி மக்களுக்கு நன்றாகவே தெரியும். தனியாகத் தேர்தலைச் சந்திக்கத் துப்பில்லாமல் கூட்டணிக்காக எவன் காலிலும் விழும், மகா தைரியசாலிகள்தான் உன்னை பயந்தாங்கொள்ளி என்கிறார்கள். மக்களின் வாக்குகளைப் பெற ஜாதியின் துணையைக் கூடவே அழைத்துச் செல்லும் மாபெரும் தைரியசாலிகள்தான் உன்னை பயந்தாக்கொள்ளி என்கிறார்கள். உனக்கு நிர்வாகத் திறமை இல்லை என்பார்கள்.. கூட்டத்தை கும்பிடு போட வைக்கும் நிர்வாகத் திறமையோ, கூண்டோடு எம்.எல்.ஏக்களை அடைத்து வைக்கும் நிர்வாகத் திறமையோ நிச்சயமாக உன்னிடம் இல்லை. தெர்மோக்கோலை வைத்து ஏரியை மூடிய புத்திசாலிகளை விடவோ, ஜெயிலில் இருக்கும் குற்றவாளிகளுக்காக தற்கொலை செய்துகொள்வேன் என்று கூறி வெட்கமில்லாமல் திரியும் மானஸ்தர்களை விடவோ நீ குறைவான அரசியல் எதுவும் செய்துவிடப் போவதில்லை. மரம் வெட்டி அரசியல் செய்தவர்களுக்கும், பிணத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கும் உன்னுடைய கள்ளங்கபடமற்ற நேர்மையான பேச்சு கலக்கத்தைதான் உருவாக்கியிருக்கிறது. கேட்பாரற்றுக் கிடப்பவர்கள் உன்னை வைத்து முகவரி தேடிக்கொள்ள முயல்கிறார்கள். உனக்கு அரசியல் சரிப்படாது என்கிறார்கள், நீ அரசியலுக்கு வந்தால் அவர்களுக்கு சரிப்படாது என்ற பயத்தை மறைக்கு முயற்சித்தபடி! அரசியலில் நீ இல்லாவிட்டாலும் கடந்த 20 வருடங்களாக உன் பெயர் அடிபடாமல் எந்தத் தேர்தலுமே இங்கு நடைபெறவில்லை. உன்னுடைய ஆதரவை நாடாத கட்சியும் இல்லை. நிழலையும் நிஜத்தையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரிந்தவன் நீ. திரையில் பேசுவதைப் போல வீரவசனம் பேசி கட்சி ஆரம்பித்தவர்களுக்கு இன்று சின்னமே இல்லை. மக்கள் செல்வாக்கைப் பயன்படுத்தத் தெரியாதவன் என உன்னை சிலாகித்துவிட்டு உனக்கு முன் அரசியலில் இறங்கிய மெகா ஸ்டார்கள் கடையைக் காலி செய்துவிட்டு மீண்டும் அரிதாரம் பூசிய கதைகளை உலகறியும். எதை எப்போது செய்யவேண்டும் என்பது உனக்குத் தெரியும். உன் மனதில் இருக்கும் ஆண்டவனுக்குத் தெரியும். இரண்டு நிமிடப் பேச்சுக்கே பதற்றத்தில் ஆங்காங்கு நிறைய உளரல்கள், புலம்பல்கள், ஒப்பாரிகள் கேட்க ஆரம்பித்து விட்டன. அப்படியானால், நீ வருவது உறுதியாகிவிட்டால் அவர்களின் நிலைமை எப்படி இருக்கும் எனப் பார்க்க பேராவலாக உள்ளது.

தலைவா… நீ அரசியலுக்கு வா… உன்னுடைய ரசிகர்களை நம்பி வரவேண்டாம். உன் எதிரிகளை நம்பி வா…. நீ நடிகனாக இருக்கும்போதே ‘என்ன செய்தாய் என்ன செய்தாய்’ என்று உரிமையோடு கேட்பவர்கள் அவர்கள்.. நாளெல்லாம் உன்னைக் திட்டித் தீர்த்துவிட்டு உன் படத்தின் முதல் காட்சிக்கு வந்து முதலில் நிற்பவர்கள் அவர்கள். நீ என்ன செய்து கிழிக்கிறாய் என்று பார்ப்பதற்காவது அவர்கள் நிச்சயம் உனக்குத்தான் வாக்களிக்கப் போகிறார்கள்..!! நீ வெற்றி பெற்றால் வாழ்த்தும் தகுதி பலருக்கு உண்டு. ஆனால் தோல்வியடைந்தால் ஏளனம் செய்யும் தகுதி எவனுக்கும் இல்லை. ஏனென்றால் அரசியலில் தோற்காதவனே இல்லை!! –

-முத்துசிவா

Comments
Loading...